Monday, October 21, 2013

பூச்சி மருந்தில் கருணாநிதியின் "கை " வண்ணம் ( நன்றி உண்மைத் தமிழன் )

பூச்சி மருந்தில் கருணாநிதியின் "கை " வண்ணம் ( நன்றி உண்மைத் தமிழன் )

கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!

1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..

இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.

மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.

மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?

அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..

எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..

அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.

சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.

“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!

நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.

ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.

ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.

“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.

இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.

இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.

அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.

கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.

சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..

சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?

No comments:

Post a Comment